Wednesday, October 8, 2008

<< அன்னையே தெய்வம் >>


தாயே அன்று
உந்தன் மடியில்
மறந்து போன
என் எல்லா சோகமும்
ஒன்று சேர்ந்து என்னைக்
கொல்கிறது
எனைத் தூங்க வைக்க
தூரத்தில் நீ என்பதால்

இந்த உலகில் எந்த
மூலையிலும்
கிடைக்கவில்லை
உந்தன் கருவறையில்
கிடைத்த எனக்கான
பாதுகாப்பு

என் மேலான உந்தன்
கவனத்துக்காகவே
எத்தனை முறை
வேண்டுமானாலும்
குழந்தையாய்
பிறக்கலாம் உனக்கு நான்

எந்தப் பாசப்படியைக்
கொண்டு நிறுத்தாயோ
தெரியவில்லை
உன் எல்லா குழந்தைக்கும்
ஒரே அளவிலான அன்பையே
காட்டுகிறாயே

என் தாரத்தின்
மறுபிறவியில்
உணர்ந்து
கொண்டேன்
நான் பிறக்க நீ
தாங்கிய பிரசவ
வலியை

உன்னில் தடுக்கி
நான் விழுந்தபோதும்
உன் பக்தனாய்
அம்மா என உன்னையே
அழைத்தபடி
விழுந்திருக்கிறேன் நான்

நான்
பார்த்திருக்கிறேன்
உன் கண்வலிக்காக
அழாமல்
என் மேல் விழுந்த
தூசிக்காய் நீ கண்ணீர்
சிந்தியதை
அன்று
நிலாவைக் காட்டி
நீ சோறு ஊட்டையில்
அருமை அறியாமல்
உன் கையை
தட்டி விட்டிருக்கிறேன்

இன்று
ரொம்பப் பசிக்கிது
நிலாவும் இருக்கிறது
சோறும் இருக்கிறது
தூரத்தில் உன் கை
அம்மா

கௌசி
Norway.
***
for contact: s.jeeva@hotmail.fr

No comments: